மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மகுடம் சூடியது. ஐபிஎல் கிண்ணத்தை சென்னை அணி வென்றிருப்பது இதுவே மூன்றாவது முறையாகும். நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு அதன் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் முக்கிய காரணமாக அமைந்தார் என்று சொன்னால் அது மிகையன்று. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை நான்கு திசைகளிலும் பறக்கவிட்ட வாட்சன், 117 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மும்பையின் வான்கடே மைதானத் தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. பூவா தலையாவில் வென்ற சென்னை அணித் தலைவர் டோனி, பந்துவீச முடிவு எடுத்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்தைக் கைப்பற்றி கொண்டாட்ட மழையில் நனையும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டக்காரர்கள். படம்: ஏஎப்பி

