அபுஜா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்ற நைஜீரிய அணித்தலைவர் ஜான் ஒபி மிக்கெலின் (படம்) தந்தை ஒரு வாரத்திற்குப் பின் கடத்தல் காரர்களால் விடுவிக்கப்பட்டார். ஜான் ஒபி மிக்கெலின் தந்தை யான மைக்கல் ஒபி நைஜீரியாவில் உள்ள இனுகு எனும் நகரத்தில் கடந்த வியாழக்கிழமை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.
தங்க ளது நிபந்தனையை ஏற்று பிணைத்தொகையாக கிட்டத்தட்ட 28,000 அமெரிக்க டாலரை ஜான் வழங்கியதை அடுத்து, அவரின் தந்தையை கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.
கடத்தல்காரர்கள் மைக்கல் ஒபிக்கு எந்தக் காயத்தையும் விளைவிக்கவில்லை என்றும் விடு விக்கப்பட்டபின் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து அவர் உதவி நாடினார் என்றும் போலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மைக்கல் ஒபி கடத்தப்பட்டது இது முதன்முறை அல்ல. கடந்த 2011ஆம் ஆண்டிலும் ஜோஸ் எனும் மத்திய நைஜீரிய நகரத்தில் இருந்து மைக்கல் ஒபியை சிலர் கடத்திச் சென்றனர்.
'டி' பிரிவில் இடம்பெற்றிருந்த நைஜீரிய அணி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது. அவ்வணி தனது கடைசி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை எதிர்த்தாடியது. அந்த ஆட்டத்திற்கு முன்னரே தம் தந்தை கடத்தப்பட்ட செய்தியை அறிய வந்ததாக ஜான் கூறினார். ஆனாலும், அவர் அந்த ஆட்டத்தில் விளையாடினார். "பெரும் குழப்பத்தில் இருந்தேன். அந்தச் சூழலில் என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆனாலும், 180 மில்லியன் நைஜீரியர்களின் நம்பிக்கையைச் சிதறடித்துவிடக்கூடாது எனக் கருதி, போட்டியில் பங்கேற்றேன்," என்று ஜான் கூறியதாக 'ஈஎஸ்பிஎன்' செய்தி தெரிவிக்கிறது.

