பலெம்பாங்: முதன்முறையாகப் பங்கேற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலேயே முந்தைய சாத னையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் 16 வயதான இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரர் சௌரப் சௌத்ரி. பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் உலக, ஒலிம்பிக் வெற்றி யாளர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த சௌத்ரி, உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகருக்கு அருகே உள்ள கலினா எனும் சிற்றூரைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 240.7 புள்ளிகளைப் பெற்றார். 2010ஆம் ஆண்டு உலக வெற்றியாளர் பட்டம் வென்ற ஜப்பானின் டொமயோக்கி மட்சுடா 239.7 புள்ளிகளைப் பெற்று, இரண்டாமிடம் பிடித்தார். இந்தியாவின் அபிஷேக் வர்மா 219.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். ஒலிம்பிக், உலக வெற்றியாளர் போட்டிகளில் பலமுறை தங்கம் வென்ற தென்கொரியாவின் ஜின் ஜிங்கோ ஐந்தாமிடத்தையே பிடிக்க முடிந்தது.
அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜூனியர் உலகக் கிண்ணப் போட்டியில் உலக சாதனையையை முறியடித்திருந்ததால் சௌத்ரி இம்முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனைப் பூர்த்தி செய்த சௌத்ரி, "முன்னாள் வெற்றி யாளர்களுடன் போட்டியிட்ட போதும் நான் எந்த நெருக்கடி யையும் உணரவில்லை," என்றார். பின்னர் நடந்த '50 மீட்டர் ரைஃபிள் 3 நிலைகள்' போட்டி களில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கத்தைத் தனதாக்கினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனையுடன் தங்கம் வென்ற இந்தியாவின் சௌரப் சௌத்ரி, 16. படம்: ஏஎஃப்பி

