லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் நிர்வாகியாகச் செயல்பட்ட முதல் ஆறு ஆட்டங்களிலும் வாகை சூடிய முதல்வர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார் அக்குழுவின் இடைக்கால நிர்வாகியாக அண்மையில் பொறுப்பேற்ற ஒலே குனார் சோல்சியார். வெம்பிளி விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் மேன்யூ 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை வீழ்த்தியது. அந்த ஒற்றை கோலை அடித்தவர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட். எனினும் எதிரணியின் பல கோல் முயற்சிகளை முறியடித்து, ஆட்டத்தின் நாயகனாக மிளிர்ந்தார் மேன்யூ கோல்காப்பாளர் டாவிட் ட கியா. அவரது அருமையான செயல்பாட்டைக் கண்டு மெய்மறந்துபோன சோல்சியார், "மேன்யூவின் ஆகச் சிறந்த கோல்காப்பாளராக உருவெடுக்க ட கியாவால் முடியும்," என நம்பிக்கையுடன் சொன்னார். "ஒவ்வோர் ஆட்டத்திலும் வெற்றிபெற வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும். அது முடியாமல் போகலாம். ஆனாலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்க வேண்டும். இப்போதைய மேன்யூ ஆட்டக்காரர்கள் அனைவரும் அத்தகைய மனப்பான்மையைக் கொண்டுள்ளனர்," என்று தம் குழுவினரைப் புகழ்ந்து பேசினார் சோல்சியார். இவ்வெற்றியால் பட்டியலில் ஆர்சனலை எட்டிப் பிடித்தது மேன்யூ. இரு குழுக்களும் தலா 41 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும் கோல் வித்தியாசத்தில் பின்தங்கியதால் மேன்யூ ஆறாம் இடத்தில் உள்ளது.
ஆறுக்கு ஆறு; மேன்யூ மேம்பாடு
1 mins read
-

