அபுதாபி: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரை இறுதிச் சுற்றில் நேற்று முன்தினம் கத்தார் குழு 4-0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு சிற்றரசுகளைத் தோற்கடித்து முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்து உள்ளது. அந்தக் குழுவின் போலெம் கோகி (22வது நிமிடம்), அல்மோஸ் அலி (37வது நிமிடம்), ஹசன் அல் ஹைடோஸ் (80வது நிமிடம்), ஹமித் இஸ்மாயில் (90வது நிமிடம்) ஆகியோர் கோல்களைப் போட்டு குழுவிற்கு அபார வெற்றியைத் தேடித் தந்தனர். முன்னதாக கத்தார் குழு கோல் அடித்தபோது, சினமடைந்த உள்ளூர் ரசிகர்களில் சிலர் அரங்கிற்குள் காலணிகளைத் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு நிறுத்திவிடாமல் இன்னொரு முறை தண்ணீர் போத்தல்களை எறிந்தனர். இதனால் இரண்டு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. கத்தாருக்கு எதிராக ரசிகர்கள் அவ்வப் போது கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கத்தார் குழு ஜப்பானை எதிர்கொள்கிறது.
ஆசியக் கிண்ணக் காற்பந்து: இறுதிச் சுற்றில் கத்தார்
1 mins read

