ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் காரை மோதச் செய்தான். அதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்புப்பட்டையணிந்து அஞ்சலி செலுத்தினர்.
நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடந்தது. உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போட்டியின்போது ராணுவத் தொப்பியுடன் களம் இறங்க இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி வீரர்கள் ராணுவத் தொப்பியுடன் களமிறங்கினர். அத்துடன் இந்தப் போட்டிக்கான சம்பளத்தை மத்திய பாதுகாப்பு நிதிக்கு வழங்க வீரர்கள் முடிவு செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவத் தொப்பியை வழங்கும் டோனி. படம்: பிசிசிஐ