சண்டிகர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் விளைவாக தொடர் 2=2 எனும் சமநிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் வெற்றியாளரை நிர்ணயிக்கும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலியா 2=0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து, இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் போட்டியிடுகின்றன.
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில் நான்காவது ஆட்டம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றிருந்தால் இந்தியா தொடரைக் கைப்பற்றி ருக்கும். முதலில் பந்தடித்த இந்தியா சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடியாக ஆடினர். அதனால் இந்தியாவின் ஓட்ட வேகம் அதிகரித்து வந்தது. இருவரும் எளிதில் அரை சதம் கடந்தனர். இந்தியா 193 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
அவர் 92 பந்துகளில் 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ரோகித், தவான் ஜோடி 193 ஓட்டங்கள் எடுத்ததும் சாதனையாகும். அடுத்து இறங்கிய கே.எல். ராகுல் தவானுக்கு ஒத்துழைப்பு அளித்தார். ஷிகர் தவான் அதிரடியாக ஆடி சதம் கடந்தார். சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 115 பந்துகளில் 3 சிக்சர்கள், 18 பவுண்டரிகளுடன் 143 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கே.எல். ராகுல் 26 ஓட்டங்களிலும் விராத் கோஹ்லி 7 ஓட்டங்களிலும் ரிஷப் பன்ட் 36 ஓட்டங்களிலும் விஜய்சங்கர் 26 ஓட்டங்களிலும் நடையைக் கட்டினர். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பந்தடிக்கத் தொடங்கிய ஆஸ்திரேலியப் பந்தடிப்பாளர்கள், இந்தியப் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை எட்டு திக்கும் பறக்க விட்டனர். டர்னர் 84 ஓட்டங்களைக் குவித்து தமது அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில் 13 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலியா 359 ஓட்டங்களை எடுத்து வாகை சூடியது. ஐந்தாவது ஒருநாள் போட்டி புதுடெல்லியில் நாளை நடை பெறுகிறது.