இருநாள் ஆட்டம் மழையால் ரத்தானபோதும் பங்ளாதேஷ் அணியை வீழ்த்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு மூன்று நாட்களே போதுமானதாக இருந்தது. வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்ட வித்தியாசத்தில் பங்ளாதேஷ் அணி தோற்றுப்போனது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றிவிட்டது. முதல் இன்னிங்சில் பங்ளாதேஷ் 211 ஓட்டங்களையும் நியூசிலாந்து ஆறு விக்கெட் இழப்பிற்கு 432 ஓட்டங்களையும் எடுத்தன.
நான்காம் நாள் முடிவில் தனது இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்களை எடுத்திருந்த பங்ளாதேஷ், கடைசி நாளான நேற்று மேலும் 129 ஓட்டங்களைச் சேர்த்து, 209 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்களான நீல் வேக்னர் ஐந்து விக்கெட்டுகளையும் டிரென்ட் போல்ட் நான்கு விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இரட்டை சதமடித்த ரோஸ் டெய்லர் ஆட்டநாயகனாகத் தேர்வானார். (படத்தில்) வேக்னர் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்கும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான். படம்: ஏஎஃப்பி