ஐ-லீக் எனும் இந்திய காற்பந்து லீக் தொடரில் மோசடி நடைபெற்றிருக்கும் எனும் சந்தேகத்தின் பேரில் அனைத்து இந்திய காற்பந்துச் சம்மேளனம் விசாரணையை நடத்த ஆணையிட்டுள்ளது.
இம்மாதம் 9ஆம் தேதி ஐ-லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் காற்பந்துக் குழுவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னை சிட்டி லீக் பட்டத்தையும் கைப்பற்றியது.
சென்னை சிட்டி குழு இதற்கு முந்தைய ஆட்டத்தில் சர்ச்சில் பிரதர்ஸ் குழுவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதன் மூலம் லீக் பட்டத்தை வெல்ல ஈஸ்ட் பெங்கால் குழுவிற்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. ஆனால் இறுதி நாள் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் குழு வெற்றி பெற வேண்டும், சென்னை சிட்டி குழு தோல்வியைத் தழுவ வேண்டும். இறுதி நாள் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் குழு கோகுலம் காற்பந்துக் குழுவை வெற்றியும் கண்டது.
மறுமுனையில் தனது இறுதி ஆட்டத்தில் சென்னை சிட்டி குழு ஆட்டத்தில் சமநிலை கண்டாலே போதும் என்ற நிலையுடன் களம் இறங்கினாலும் ஆட்டத்தில் முதலில் கோல் போட்டது மினர்வா பஞ்சாப் குழு. ஆனால் இந்த ஆட்டத்தில் இரண்டாம் பாதியில் மூன்று கோல்களைப் போட்டு ஆட்டத்தையும் பட்டத்தையும் வென்றது சென்னை சிட்டி குழு.
இந்நிலையில் மினர்வா பஞ்சாப் குழு தனது முக்கியமான இறுதி ஆட்டத்தில் தனது முன்னணி ஆட்டக்காரர்களை ஆட்டத்தை விட்டு வெளியேற்றி மாற்று ஆட்டக்காரர்களைப் புகுத்தியது ஏன் என்று ஈஸ்ட் பெங்கால் குழுத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஆட்ட ஆணையர் பாலசுப்பிரமணியம் இந்த ஆட்டம் 'முறையாக நடைபெறவில்லை' என்றும் சில இடங்களில் முறைகேடு நடந்திருக்கலாம் என தாம் நம்புவதாகவும் தனது ஆட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் சென்னை சிட்டி குழுவின் பென்ட்ரோ மான்ஸி பெனால்டி வாய்ப்பை எடுப்பதற்கு முன் அவர் தாம் பதை எந்த திசையில் உதைக்கப் போகிறோம் என்பதை சைகை முறையில் காட்ட, எதிரணி கோல்காப்பாளர் மறுதிசையில் பாய்ந்து பெனால்டி வாய்ப்பு கோலானது," என்று ஆட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இது போன்று மினர்வா குழுவின் ஆட்டக்காரர்கள் மாற்றப்பட்டபோது அவர்கள் அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் அளித்ததாக பாலசுப்பிரமணியம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அனைத்து இந்திய காற்பந்து சம்மேளனம் ஐ-லீக் இறுதி ஆட்டத்தில் பந்தயப்பிடிப்பு நடந்திருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அதை விசாரிக்க ஆணை பிறப்பித்துள்ளது.