சாடியோ மானே என்ற லிவர்பூல் காற்பந்து ஆட்டக்காரர் போட்ட இரண்டு கோல்கள் நேற்று (மார்ச் 13) லிவர்பூல் அணி சாம்பியன்ஸ் லீக் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிச் செல்ல கைகொடுத்தது.
'ஏன்ஃபீல்ட்' அரங்கத்தில் நடந்த முதல் சுற்று ஆட்டம் கோல்கள் ஏதும் இல்லாமல் முடிந்தது. ஐந்து தடவை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றுள்ள லிவர்பூல் அணி, 'மியூனிக்' அரங்கத்தில் நடந்த இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றது.
கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் நான்கு இங்கிலாந்து குழுக்களில் லிவர்பூல் காற்பந்துக் குழுவும் ஒன்று. லிவர்பூலுடன் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் குழுக்கள் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தின் கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
யார் யார் கால் இறுதிச் சுற்றில் மோதவுள்ளனர் எனும் பட்டியல் வரும் வெள்ளிக்கிழமை (15 மார்ச்) மாலை 7 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி)இடம்பெறும்.