பெங்களூரு: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மும்பை தோற்கடித்துள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மூன்று முறை கிண்ணம் ஏந்தியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் வெற்றியைப் பதிவு செய்தது. கடந்த ஆண்டு ஆலோசகராக இருந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, இந்தப் பருவத்தில் வீரராக மும்பை அணிக்குத் திரும்பினார். பூவா தலையாவில் வென்ற பெங்களூரு அணித் தலைவர் விராத் கோஹ்லி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூருவின் குவிண்டன் டி காக்கும் அணித் தலைவர் ரோகித் சர்மாவும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்கள் பவர்=பிளேயான முதல் 6 ஓவர்களில் 52 ஓட்டங்களை எடுத்தனர். இந்த ஜோடியைச் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பிரித்தார். அவரது பந்துவீச்சில் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயன்ற டி காக் (23 ஓட்டங்கள், 20 பந்துகள், 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 48 ஓட்டங்கள் (33 பந்துகள், 8 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) எடுத்து நடையைக் கட்டினார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 32 ஓட்டங்களுடன் (14 பந்துகள், 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) களத்தில் இருந்தார். பின்னர் 188 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்குச் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து பார்த்தீவ் பட்டேல் 31 ஓட்டங்களிலும் அணித் தலைவர் விராத் கோஹ்லி 46 ஓட்டங் களிலும் ஹெட்மயர் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதில் கோஹ்லி ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டியில் 5,000 ஓட்டங்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையுடன் வெளியேறினார். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
கடைசி ஓவரில் வென்ற மும்பை அணி
2 mins read

