லிவர்பூல்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தக்குத் தகுதி பெறும் வாய்ப்பு லிவர்பூலுக்கு மிகவும் குறைவாக இருக்கிறது.
அரையிறுதிச் சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் பார்சிலோனாவிடம் அது 3=0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இன்றிரவு லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டம் நடைபெறுகிறது.
இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமாயின் பார்சிலோனாவைக் குறைந்தது 4=0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடிக்க வேண்டும்.
பார்சிலோனா இன்றிரவு ஒரு கோல் போட்டாலும்கூட, எதிரணியின் விளையாட்டரங்கத்தில் போடப்படும் கோல் அடிப்படையில் அதன் நிலை மேலும் வலுவடைந்துவிடும்.
எனவே, இன்றிரவு நடை
பெறும் ஆட்டம் லிவர்பூலுக்குச் சவால்மிக்கதாக அமையும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நேற்று மாலை நிலவரப்படி பார்சிலோனாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் லிவர்பூலின் நட்சத்திர ஆட்டக்காரர் முகம்மது சாலா விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
அண்மையில் நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் காயமடைந்தார். இன்றைய ஆட்டத்திற்குள் அவர் குணமடைந்துவிடுவாரா என்பது குறித்து லிவர்பூல் தெரிவிக்கவில்லை.
முதல் ஆட்டத்தில் லிவர்பூலுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்டார் பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸி.
அதிலும் ஃப்ரீகிக் மூலம் அவர் அனுப்பிய பந்து மிக அழகாக வளைந்து வலைக்குள் சென்றது. இன்றைய ஆட்டத்திலும் கோல் போடும் முனைப்புடன் அவர் களமிறங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.
அவர் இன்று கோல் போடாதபடி லிவர்பூல் தற்காப்பு ஆட்டக்காரர்களால் தடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

