சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 'டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ்' குழு 3-2 கோல் கணக்கில் 'அயக்ஸ்' குழுவை வென்று இறுதிச் சுற்றுக்குச் செல்லவுள்ளது. ஆட்டத்தின் பிற்பகுதியில் ஸ்பர்ஸ் ஆட்டக்காரர் லுக்கஸ் மௌரா தனது அணிக்கு மூன்று கோல் புகுத்தி எதிரணியை ஸ்தம்பிக்கச் செய்தார்.
ஆட்டம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே அயக்ஸ் ஆட்டக்காரர் மத்தாய்ஸ் டிலைட் ஒரு கோலைப் புகுத்தினார். அதன் பிறகு அதே அணியைச் சேர்ந்த ஹக்கீம் ஸயே, 35வது நிமிடத்தில் மற்றொரு கோலைப் போட்டார். அரையாட்டம் வரை ஸ்பர்ஸ் அணிக்கு எந்த கோலும் இல்லாத நிலையில் அயக்ஸ் ஆட்டத்தை ஜெயிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உயர்ந்தன.
ஆனால் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் லுக்கஸ் மௌரா மிகச் சாதுர்யத்துடன் வலையின் வலப்பக்கத்திற்குள் காற்பந்தை உதைத்து தனது அணிக்கான முதல் கோலைப் புகுத்தினார். அடுத்தடுத்து மேலும் இரண்டு கோல்களைப் புகுத்தி அவர் தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.