சுவிட்சர்லாந்து: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இங்கிலாந்து குழுவான மான்செஸ்டர் சிட்டி பங்குபெறுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய காற்பந்து சம்மேளனம் நிதி நிர்வாக அதிகாரிகள் பரிந்துரைக்கவுள்ளனர்.
ஜெர்மானிய சஞ்சிகை ஒன்றில், நிதி நிர்வாக விதி முறைகளை மான்செஸ்டர் சிட்டி பின்பற்றாதது தொடர்பில் செய்தி வெளியிடப்பட, ஐரோப்பிய காற்பந்து சம்மேளனமும் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கும் அது குறித்த புலனாய்வுப் பணியில் இவ்வாண்டு ஈடுபட்டன.
அவ்வாறு விதிமுறைகள் பின்பற்றப்படாதது உறுதிசெய்யப்பட்டு அக்குழுவுக்குத் தடை விதிக்கப்பட்டால், அந்தத் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மான்செஸ்டர் சிட்டிக்கு அனுமதி வழங்கப்படும்.
2014ஆம் ஆண்டில், நிதி நிர்வாக விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் ஐரோப்பிய காற்பந்துச் சம்மேளனம், மான்செஸ்டர் சிட்டிக்கு 60 மில்லியன் யூரோ அபராதம் விதித்தது. விளையாட்டாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகள் வரம்புக்கு உட்பட்டதாக இல்லை என்பதும் ஐரோப்பிய காற்பந்து சம்மேளனத்தின் குற்றச்சாட்டுகளில் ஒன்று.
தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஜெர்மானிய சஞ்சிகை திட்டமிட்டு இதுபோன்ற செய்தியை வெளியிட்டுள்ளது என்று மான்செஸ்டர் சிட்டி குழு தெரிவித்துள்ளது.