லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணத்தை மான்செஸ்டர் சிட்டி நேற்று ஏந்தியது.
இறுதி ஆட்டத்தில் அது வாட்ஃபர்ட் குழுவை 6=0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது.
இதன்மூலம் இந்தப் பருவத்தில் லீக் பட்டம், எஃப்ஏ கிண்ணம், கரபாவ் கிண்ணம் ஆகிய மூன்றிலும் சிட்டி வாகை சூடியுள்ளது.
கடந்த வாரம் லீக் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட சிட்டி நேற்றைய ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது.
"எங்களுக்கு இது ஒரு நம்பமுடியாத இறுதி ஆட்டமாக அமைந்தது. மான்செஸ்டர் சிட்டியைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக, ஆட்டக் காரர்களுக்கு எனது வாழ்த்து களைத் தெரிவித்துக்கொள் கிறேன். சிட்டி கிண்ணங்கள் வென்றதற்கு எங்கள் ஆட்டக் காரர்களே காரணம்," என்று சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்தார்.
நேற்றைய இறுதி ஆட்டத்தின் இடைவேளையின்போது சிட்டி 2=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த கோல்களை டேவிட் சில்வாவும் ரஹீம் ஸ்டெர்லிங்கும் போட்டனர்.
மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய கெவின் டி பிராய்ன ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் சிட்டியின் மூன்றாவது கோலைப் போட்டார்.
நான்காவது கோலை கேப்ரியன் ஜேசுஸ் போட்டார். வெற்றி நிச்சயம் என்ற நிலையிலும் சிட்டியின் கோல் பசி அடங்கவில்லை.
ஆட்டத்தின் 81, 87வது நிமிடங்களில் ரஹீம் ஸ்டெர்லிங் கோல்களைப் போட்டு தமது 'ஹாட்ரிக்'கைப் பதிவு செய்தார்.
இதற்கு முன்பு ஆகக் கடைசியாக 1953ஆம் ஆண்டில் நடைபெற்ற எஃப்ஏ கிண்ண இறுதி ஆட்டத்தில் ஸ்டேன் மோர்டென்சன் மூன்று கோல் களைப் போட்டார்.
இந்த ஆண்டு சிட்டிக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. கடும் போட்டிகளுக்குப் பிறகு கவனம் சிதறாமல் விளையாடிய சிட்டி அதன் இலக்குகளை எட்டியிருப்பது அதன் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.