சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பந்தடிப்பாளர் மைக்கல் ஸ்லேட்டர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப் பட்டார். கடந்த ஞாயிறன்று சிட்னியில் இருந்து குவான்டாஸ் விமானம் மூலம் வாகா வாகா நகருக்குச் செல்வதாக இருந்தார் ஸ்லேட்டர். விமானத்தில் ஏறியபின் நண்பர்கள் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் கழிவறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்டு திறக்க மறுத்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, பாதுகாவலர்கள் வரவழைக்கப்பட்டு, விமானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார். இச்சம்பவம் காரணமாக விமானம் அரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. பின்னர் தமது நடத்தைக்காக ஸ்லேட்டர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அண்மையில் ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றிய அவர், அடுத்ததாக உலகக் கிண்ணப் போட்டிகளிலும் வர்ணனையாளராகத் தமது பணியைத் தொடரவிருக்கிறார்.