கோலாலம்பூர்: இப்பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் மகுடத்தையும் எஃப்ஏ, லீக் கிண்ணங்களையும் வென்றுள்ளது மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு.
அதன் உரிமையாளரான அபு தாபி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் மன்சூர், மலேசியாவின் உள்ளூர் காற்பந்து லீக்கில் இடம்பெறும் குழுவொன்றில் முதலீடு செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஃபெரான் சொரியானோ மலேசியாவின் விளையாட்டுத் துறை அமைச்சரான சயட் சடிக்கை நேற்று முன்தினம் புத்ரா ஜெயாவில் சந்தித்தார். மலேசிய காற்பந்துத் துறையை மேம்படுத்துவது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
"மான்செஸ்டர் சிட்டி இங்குஉள்ள மலேசிய காற்பந்துக் குழு வை வாங்கும் சாத்தியம் குறித்தும் பேசினோம்.
"மலேசியாவின் இளையர் காற்பந்துப் பிரிவினருடன் கூட்டாகச் செயல்படும் முயற்சியும் ஆராயப்பட்டது," என்று மலேசிய நாளிதழான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார் அமைச்சர் சயட் சடிக். உலகின் மற்ற பகுதிகளிலும் காற்பந்துக் குழுக்களை வாங்கியிருக்கும் ஷேக் மன்சூர் ஆசிய பகுதியில் ஜப்பானின் 'யோகோ ஹமா எப் மரினோஸ்' குழுவையும் சீனாவின் 'சீஷுவான் ஜியூனியூ' குழுவையும் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.