லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முந்திய பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதின.பிரிஸ்டோலில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்தது. அதன்படி பாகிஸ்தானின் இமாம்=உல்=ஹக், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர்.இமாம்-உல்-ஹக் 32 ஓட்டங்களும் பகர் ஜமான் 19 ஓட்டங்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய பாபர் ஆசம் 108 பந்துகளில் 112 ஓட்டங்கள் குவித்தார்.
அனுபவ வீரர் சோயிப் மாலிக் 59 பந்துகளில் 44 ஓட்டங்கள் சேர்த்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47.5 ஓவர்களில் 262 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகம்மது நபி மூன்று விக்கெட்டுகளும் ரஷித் கான், தவ்லாத் ஜத்ரான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 263 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங் கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாசத் 23 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக வெளியேறினார்.
இதனால் சற்றும் கலக்கம் அடையாத மற்ற ஆப்கான் வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஷாசய் 49, ரக்மட் ஷா 32, சகிடி 74, சமுல்லா 22, ஆப்கான் 7, நபி 34, சாட்ரன் 1, ஓட்டங்கள் அடித்தனர். நைப் (2) மற்றும் ரஷித் கான் (5) கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் விளைவாக ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 3 விக்கெட் வித்தி யாசத்தில் பாகிஸ்தானை வீழ்த் தியது.
பாகிஸ்தான் தரப்பில் ரியாஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாசிம் 2 விக்கெட்டுகளும் சடப் கான், முகம்மது ஹஸ்னைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன் கிடைத்த இந்த வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு ஓர் ஊக்குவிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாறாக, பாகிஸ்தான் வீரர்கள் இந்நேரம் பதற்றம் அடைந்திருக் கலாம் என்று அதன் ரசிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதைச் சிலர் மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருப்பதால் உலகக் கிண்ணப் போட்டியில் அது விழிப்புடன் செயல்படும் என்று பேசப்படுகிறது
தத்தளித்த இலங்கை
மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கையும் தென்னாப்பிரிக் காவும் மோதின.
இந்த ஆட்டத்தில் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
பூவா தலையாவில் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி தென்னாப்பிரிக்கா அணியின் ஹசிம் ஆம்லா, மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர்.
மார்கிராம் 21 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இரண்டாவது விக்கெட்டுக்கு ஹசிம் ஆம்லா வுடன் அணித் தலைவர் டு பிளிஸ்ஸி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆம்லா 61 பந்துகளில் 65 ஓட்டங்களும் டு பிளிஸ்ஸி 69 பந்துகளில் 88 ஓட்டங்களும் சேர்த்தனர்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 138 ஓட்டங்கள் குவித்தது.
வான் டெர் டஸ்சன் 40 ஓட்டங்களும் டுமினி 22 ஓட்டங்களும் பெலுக்வாயோ 25 ஓட்டங்களும் கிறிஸ் மோரிஸ் 26 ஓட்டங்களும் சேர்க்க தென்னாப் பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்கள் குவித்தது.
339 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா ஓட்டம் எதும் எடுக்காமலும் அடுத்து வந்த திரிமன்னே 10 ஓட்டங்களிலும் குசல் மெண்டிஸ் 37 ஓட்டங்களிலும் வெளியேறி னார்கள்.
இலங்கை அணி 170 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது குணரத்தினே ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பினர். மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி 64 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தனஜெய டி செல்வா 5, ஜீவன் மெண்டிஸ் 18, ஸ்ரீவர்த்தனா 5, வண்டார்சே 3, லக்மல் 1, என வெளியேற, பெரேரா 8 ஓட்டங் களுடன் களத்தில் இருந்தார்.
இலங்கை அணி 251 ஓட்டங் கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் னாப்பிரிக்கா அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் அண்ட்லி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லுங்கி 2 விக்கெட்டும் ரபாடா, தாஹிர், டவினி, டுமினி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
2019-05-26 06:10:00 +0800