செவில்: தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஸ்பானிய அரசர் கிண்ணத்தை வெல்லும் பார்சிலோனா குழுவின் கனவைத் தவிடுபொடியாக்கியது வெலன்சியா குழு. நேற்று அதிகாலை நடந்த இறுதி ஆட்டத்தில் வெலன்சியா 2=-1 என்ற கோல் கணக்கில் பார்சாவைத் தோற்கடித்தது.
ஆட்டத்தின் முற்பாதியில் கெவின் கமேரோ, ரோட்ரிகோ மொரினோ ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலடிக்க, 2=-0 என்ற முன்னிலையுடன் இடைவேளைக்குச் சென்றது வெலன்சியா. இதற்குமுன் 3=0 முறை கிண்ணம் வென்று சாதித்துள்ள பார்சா குழு, காயம் காரணமாக லூவிஸ் சுவாரெஸ், ஒஸ்மான் டெம்பெலே ஆகியோர் இல்லாததால் தடுமாறியது. இருப்பினும், இரண்டாம் பாதியில் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, கோல் வித்தியாசம் ஒன்றாகக் குறைந்தது.
இடைநிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் வெலன்சியா வீரர் கோன்சாலோ கேதிஸ் நல்லதொரு கோல் வாய்ப்பைக் கோட்டைவிட்டார். இருப்பினும், 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு வெலன்சியா குழு அரசர் கிண்ணத்தைக் கைப்பற்றுவதை பார்சாவால் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், வெலன்சியா காற்பந்துச் சங்கத்தின் தலைவர் அனில் மூர்த்தி, தனது குழுவின் சாதனைகளை வெகுவாகப் பாராட்டியுள்ளார். "இந்தப் பருவத்தில் லாலிகா பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற்றோம்.
"இவ்வாண்டு யூரோப்பா லீக்கில் அரை இறுதிப் போட்டி வரை சென்று பின்னர் ஆர்சனல் குழுவால் தோற்கடிக்கப்பட்டோம். இருப்பினும் தளராமல் போராடி, தோற்கடிக்க முடியாத பார்சிலோனா குழுவை வீழ்த்தி சாதித்துவிட்டோம். இந்த வெற்றி எங்கள் சாதனைகளுக்கு மகுடம் சூட்டியதைப் போன்ற உணர்வைத் தருகிறது," என்று ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சிடம் கூறினார்.

