பக்கூ: அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் நேற்று அதிகாலை நடைபெற்ற யூரோப்பா லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆர்சனல் குழுவை செல்சி 4-1 எனும் கோல் கணக்கில் தீர்த்துக்கட்டியது.
இரு இங்கிலிஷ் காற்பந்துக் குழுக்கள் பொருதிய இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நான்கு கோல்களையும் புகுத்தி வெற்றி வாகை சூடியது செல்சி.
செல்சியின் வெற்றிக்கு வித்திட்ட ஆட்ட நாயகன் ஈடன் ஹசார்ட் இரு கோல்களை அடித்தார். அவற்றில் ஒன்று பெனால்டியின் மூலம் கிடைத்தது.
ஆர்சனல் குழுவின் முன்னாள் ஆட்டக்காரர் ஒலிவியே ஜிரூ, ஸ்பானிய ஆட்டக்காரர் பெட்ரோ ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலை அடித்தனர். பெட்ரோ அடித்த கோலுக்கும் வழிவகுத்தவர் ஹசார்ட்தான்.
ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஆர்சனல் தரப்பில் அலெக்ஸ் இவோபி ஒரு கோலைப் புகுத் தினார். ஆனால், ஆர்சனலைத் தோல்வியின் பிடியிலிருந்து மீட்க அது போதவில்லை.
ஏழு ஆண்டுகளில் செல்சி ஏந்திய மூன்றாவது ஐரோப்பியக் கிண்ணம் இது. 2012ஆம் ஆண்டில் பிரசிதிபெற்ற சாம்பி யன்ஸ் லீக்கை வென்ற அக்குழு, அதற்கு அடுத்த ஆண்டு யூரோப்பா லீக் வெற்றிக்கனியைச் சுவைத்தது.
நடந்து முடிந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் மான் செஸ்டர் சிட்டி போன்ற முன்னணி குழுக்களுக்கு எதிரான முக்கிய ஆட்டங்களில் செல்சி சோபிக்க வில்லை.
அவற்றுக்கு எல்லாம் ஈடு செய்யும் அளவில் இப்போது கிடைத்துள்ள யூரோப்பா லீக் கிண்ணம் அக்குழுவுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.
முக்கிய நபர்கள் விலகக்கூடும்
எனினும் குழுவில் பொழியும் உற்சாகத்தைச் சுற்றி கருமேகம் சூழ்வதுபோல, செல்சியின் இரு முக்கிய நபர்கள் கூடிய விரைவில் குழுவைவிட்டு வெளியேறக்கூடும் என ஊகம் நிலவுகிறது.
ஒரு காலகட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடுவதைத் தமது கனவாகக் கொண்டிருந்தார் பெல்ஜிய ஆட்டக்காரரான ஹசார்ட். இப்போது அவர் அந்த லீக்கில் ஏழு ஆண்டுகள் விளை யாடியாயிற்று.
தற்போது செல்சிக்கும் பிரிமியர் லீக்கிற்கும் பிரியாவிடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என அவர் சூசகமாகக் கூறுகிறார். ஸ்பானிய ஜாம்பவான் ரியால் மட்ரிட்டுக்கு ஹசார்ட் செல்லக் கூடும் எனக் கூறப்படுகிறது.
“உலகின் தலைசிறந்த குழுக் களில் ஒன்றான செல்சியில் ஏழு ஆண்டுகள் விளையாடியுள்ளேன்.
“எனவே, புதிய சவாலுக்கான நேரம் வந்துவிட்டது என நினைக் கிறேன். நான் முடிவெடுத்து விட்டேன். இனி குழு நிர்வாகம் தான் முடி வெடுக்க வேண்டும்,” என ஆட்டம் முடிந்த கையோடு செய்தியாளர் ஒருவரிடம் ஹசார்ட் கூறினார்.
ஹசார்ட்டைபோல செல்சி நிர்வாகி மொரிசியோ சாரியும் பணியிலிருந்து விலகக்கூடும் எனப் பேசப்படுகிறது.
செல்சி நிர்வாகியாக தாம் பதவியேற்ற பிறகு அக்குழு பிரகா சிக்கவில்லை என்று சாடிய விமர்சகர்களின் வாயை இப்போது சாரி அடைத்து இருக்கலாம்.
இருப்பினும், தமது சொந்த நாடான இத்தாலியின் யுவென்டஸ் குழுவின் அடுத்த நிர்வாகியாக சாரி பொறுப்பேற்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.2019-05-31 06:00:00 +0800