டோர்சாவ்ன்: அடுத்த ஆண்டுக்கான ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை ஸ்பெயின் வலுப்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் 4=1 எனும் கோல் கணக்கில் ஃபேரோ தீவுகளை அது ஊதித் தள்ளியது.
இதுவரை மூன்று தகுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்பெயின் அவை அனைத்திலும் வாகை சூடியுள்ளது.
இதன் காரணமாக ‘எஃப்’ பிரிவில் அது முன்னிலை வகிக்கிறது.
தனிப்பட்ட காரணத்தினால் ஸ்பெ யினின் நிர்வாகியும் அக்குழுவின் முன்னாள் நட்சத்திர வீரருமான லூவிஸ் என்ரிக்கே விடுப்பில் உள்ளார்.
ஃபேரோ தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்வாகியின் வழிகாட்டுதல் இல்லாதபோதிலும் அக்குழு சக்கைப்போடு போட்டது.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதன்வழி வந்த பந்தை வலைக்குள் சேர்த்தார் ஸ்பானிய அணித் தலைவர் செர்ஜியோ ராமோஸ்.
ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் ஜேசுஸ் நவாஸ் ஸ்பெயினின் இரண்டாவது கோலைப் போட்டார்.
ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே எதிரணி இரண்டு கோல்களைப் போட்டும் ஃபேரோ தீவுகள் துவண்டுவிடவில்லை.
மாறாக, அது முடிந்த அளவுக்குத் தாக்குதல்களை நடத்தியது.
அந்த முயற்சிகளுக்குப் பலனாக ஆட்டம் தொடங்கி கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் ஃபேரோ தீவுகள் கோல் போட்டது.
ஆனால் ஸ்பெயின் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி அடுத்த நான்கு நிமிடங்களில் அதன் மூன்றாவது கோலைப் போட்டது.
மத்தியத் திடல் ஆட்டக்காரர் இஸ்கோ அனுப்பிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளி வந்தபோது, அதைத் தடுக்க பாய்ந்த ஃபேரோ தீவுகளின் கோல்காப்பாளர் மீது பட்டு வலைக்குள் புகுந்தது.
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஸ்பெயினின் தற்காப்பு ஆட்டக்காரர் ஹோசே கயா அபாரமான முறையில் கோல் போட்டு எதிரணியின் கதையை முடித்து வைத்தார்.
மற்றோர் ஆட்டத்தில் பல்கேரியாவை 2=1 எனும் கோல் கணக்கில் செக் குடியரசு தோற்கடித்தது.
ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் பல்கேரியா கோல் போட்டு முன்னிலை பெற்றது. ஆனால் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய செக் குடியரசு 19வது, 50வது நிமிடங்களில் கோல்களைப் போட்டு ஆட்டத்தைக் கைப்பற்றியது.
செக் குடியரசின் இரண்டு கோல்களையும் பேட்ரிக் ஷீக் போட்டார்.
மற்றோர் ஆட்டத்தில் டென்மார்க்கும் அயர்லாந்தும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.