சாவ் பாவ்லோ: பிரேசில் காற்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு எதிராக அந்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுப் புகார் செய்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு ஹோட்டலில் நெய்மார் தம்மைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக நஜிலா டிரின்டாடே டி சூசா புகார் செய்துள்ளார்.
இன்ஸ்டகிராம் மூலம் நெய்மாருடன் பழக்கம் ஏற்பட்டதாக அவர் கூறினார். அதனை அடுத்து, பாரிஸில் நெய்மாரைச் சந்தித்ததாக அவர் தெரிவித்தார். தமது விமானப் பயணச் சீட்டு, ஹோட்டல் அறை ஆகியவற்றுக்கான பணத்தை நெய்மார் செலுத்தியதாக அவர் போலிசிடம் தெரிவித்தார்.
பாலியல் புகார் குறித்து ஊடகத்தில் செய்தி வெளிவந்ததும் அதுகுறித்து நெய்மார் இன்ஸ்டகிராமில் காணொளி வெளியிட்டார்.
இதற்கிடையே, நெய்மாருக்கு எதிராகப் பாலியல் பலாத்காரப் புகார் செய்யப்பட்டதை அடுத்து, அவரை வைத்து எடுக்கும் விளம்பரங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்போவதாக அவருக்கு ஆதரவு அளித்து வரும் சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.