லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் போட்டிகளில் இதுவரையிலும் இந்தியாவும் நியூசிலாந்தும் மட்டுமே தோற்காத அணிகளாக உள்ளன.
நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இந்திய அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் நாளை நாட்டிங்ஹாமில் நடக்கிறது.
இதில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பாக உள்ளன. எனவே போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மழை குறுக்கிடாமல் இருந்தால் ரசிகர்கள் ஜோராக ரசிக்கலாம்.
உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியிருந்தது. இதற்குப் பழிதீர்க்கும் வகையில் இந்தியா விளையாடும். இந்நிலையில் நியூசிலாந்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என இந்தியாவுக்கு நெருக்கடி இருக்கும் என நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துக் கூறிய பெர்குசன், “இந்திய அணி வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
"பயிற்சி ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அதை வைத்துத் தொடரை கணக்கிடக்கூடாது. ஆனால், பயிற்சி ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.
"எங்கள் அணியின் தொடக்க பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினால், மிடில் ஓவர்களில் என்னுடைய வேலை எளிதாக இருக்கும்,” என்றார்.