புத்ரா ஜெயா: மலேசியாவின் பூப்பந்தாட்ட நட்சத்திரம் லீ சோங் வெய் தனது ஓய்வை உறுதி செய்வதாக அறிவித்துள்ளார். நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர், தாம் ஓய்வுபெறுவதை உறுதி செய்யும்போது அவரையும் மீறி கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.
“பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பந்தாட்ட விளையாட்டில் இருந்து ஓய்வுபெறப்போகிறேன் என்பதை அறிவிப்பதற்காகவே இந்தச் செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். இது கடினமான முடிவுதான். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. நான் ஓய்வுபெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படிதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த மாதம் நான் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது மருத்துவர்கள் என்னை விளையாட்டில் இருந்து ஓய்வுபெறும்படி அறிவுறுத்தினர்.
“பூப்பந்தாட்டம் போன்ற விறுவிறுப்பான விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உடற்தகுதியை இப்போது நான் பெற்றிருக்கவில்லை. அப்படியிருக்கும்போது நான் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவது எனது ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதாக இருக்காது.
“எனக்கு இதுநாள் வரையிலும் ஊக்கமளித்து வந்த அனைத்து மலேசியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் எனது ரசிகர்களுக்கும் எனது பயிற்றுநர்களான திரு மிஸ்புன் சிடேக், திரு தே சியூ போக் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார் திரு லீ. அத்துடன் பூப்பந்தாட்ட வீராங்கனையான அவரது மனைவி வோங் மியூ சூ மற்றும் அவரது இரண்டு மகன்கள் கிங்ஸ்டன், டெர்ரன்ஸ் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இவரது மனைவி வோங் மியூ சூ, தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ஆம் ஆண்டில் வோங் மியூ சூவை கரம் பிடித்தார் திரு லீ.
ஓய்வுக்குப்பின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதுடன் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடப்போவதாகத் தெரிவித்த திரு லீ, நீண்ட காலமாக ஒத்திப்போட்டு வைத்த தனது தேனிலவை இப்போது கொண்டாடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.
ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை வெள்ளிப் பதக்கங்களை வென்ற பூப்பந்தாட்ட வீரர் லீயின் மூக்கின் உட்பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கடந்த ஆண்டு ஜூலை மாதம் கண்டறியப்பட்டு, தைவானில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் அவர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.