உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வி ஒரு பக்கம் இருந்தபோதிலும் அந்த விளையாட்டை நம்பி கோடிக்
கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. கிரிக்கெட் விளையாட்டின் மீது ஏராளமானோர் கொண்டிருக்கும் மோகம்தான் வர்த்தக நிறுவனங்களின் பையை நிரப்புகிறது.
கடந்த ஆண்டில் உலக முழுவதும் சுமார் 700 மில்லியன் பேர் கிரிக்கெட்டை நேரடியாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்ததாக அனைத்துலக ஒளிபரப்பு பார்வையாளர் கழகம் குறிப்பிட்டுள்ளது. உலகக் கிண்ண ஆட்டங்கள் நடைபெறுவதால் இந்த ஆண்டில் மேலும் அதிகமானோர் கிரிக்கெட்டை பார்ப்பார்கள் என்று அது தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை சுமார் 12 மில்லியன் பேர் ‘ஹாட்
ஸ்டார்’ மூலம் பார்த்தனர். அன்று ஒரு நாள் மட்டும் தொலைக்காட்சி நிறுவனங்கள் 150 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் புரிந்ததாக செய்திகள் வந்துள்ளன.
இவற்றில் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ மட்டும் ரூ.135.5 கோடிக்கு வர்த்தகம் புரிய இலக்கு நிர்ணயித்தது. இந்த கிரிக்கெட் பருவத்தில் நாள் ஒன்றுக்கு 5,500 வினாடிகளை அது விளம்பரத்துக்கு ஒதுக்கியது.
வழக்கமாக ஒரு வினாடிக்கு ரூ.1.6 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் வரை விளம்பரக் கட்டணம் வசூலிக்கும் இந்நிறுவனம் இந்தியா=பாகிஸ்தான் விளையாட்டு நடைபெற்ற அன்று ஒரு வினாடிக்கு ரூ.2.5 லட்சம் ரூபாய் என்று நிர்ணயித்தது.
அந்தக் கட்டண உயர்வையும் விளம்பர நிறுவனங்கள் பொருட்படுத்தாமல் விளம்பரம் கொடுக்க வரிசை பிடித்து நின்றதுதான் வியப்பிலும் வியப்பு.
அந்த நாளில் விளம்பரம் செய்ய ஊபர், கோக=கோலா, அமேசான், ஒன்பிளஸ், எம்ஆர்எஃப் டயர்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டன.
உலகக் கிண்ண போட்டிகளை நடத்த 20 முத்திரைச் சின்ன (பிராண்ட்) நிறுவனங்கள் கூட்டு சேர்ந்துள்ளன. இவற்றில் 30 விழுக்காட்டு நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா=பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்ற ஓல்ட் டிரஃபோர்ட் திடலின் இருக்கைகளில் 26,000 பேர் வரை அமரலாம். அதன் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்பனைக்கு வந்த 48 மணி நேரத்தில் முடிந்துவிட்டன.
கடைசி நேரத்தில் நுழைவுச்சீட்டு வாங்குபவர்களுக்கான விற்பனைத் தளத்தில் 6,000 அமெரிக்க டாலர் வரை நுழைவுச்சீட்டு விற்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.