சாவ் பாவ்லோ: தென்னமெரிக்க காற்பந்துக் குழுக்கள் பொருதும் கோப்பா அமெரிக்கா போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெருவை 5-0 எனும் கோல் கணக்கில் பிரேசில் வீழ்த் தியது. இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரிவில் முன்னிலை வகிக்கும் பிரேசில், காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்று உள்ள மற்றொரு குழு வெனி சுவேலா. பொலிவியாவை 3-1 எனும் கோல் கணக்கில் அக்குழு நேற்று வென்றது.
போட்டியை ஏற்று நடத்தும் பிரேசில் முந்தைய இரு ஆட்டங் களில் ஜொலிக்காததால் அதன் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப் படுத்தியிருந்தனர். முதல் ஆட்டத்தில் பொலிவியாவை 3-0 எனும் கோல் கணக்கில் வென்று இருந்தாலும் அதற்கு அடுத்த ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி வெனிசுவேலாவுடன் பிரேசில் சமநிலை கண்டது.
ஆனால், போட்டியில் இதுவரை காணப்படாத ஆட்டத்திறனை நேற்றைய ஆட்டத்தில் பிரேசில் வீரர்கள் வெளிப்படுத்தினர். காயத்தின் காரணமாக கோப்பா அமெரிக்கா போட்டியில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் பங்கேற்க வில்லை என்றாலும் சக ஆட்டக் காரர்கள் தாக்குதலில் பலத்தைக் காட்டினர்.
பெருவுடனான ஆட்டத்தின் முதல் பாதியில் பிரேசில் தரப்பில் காசிமிரோ, ரொபெர்ட்டோ ஃபர்மினோ, எவர்ட்டன் ஆகிய ஆட்டக்காரர்கள் தலா ஒரு கோலை அடித்து வெற்றியைக் கிட்டத்தட்ட உறுதிசெய்தனர்.
இரண்டாம் பாதியில் டேனி ஆல்வேஸ், வில்லியன் ஆகிய இருவரும் ஆளுக்கு ஒரு கோலை அடித்து பிரேசிலுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தனர். கோல் எண்ணிக்கையை ஆறாக உயர்த்தி இருந்திருக்க வேண்டிய நேரத்தில், பெனால்டி மூலம் கிடைத்த வாய்ப்பை பிரேசில் கோட்டைவிட்டது. கேப்ரியல் ஜெசுஸ் உதைத்த பந்தை பெரு வின் கோல்காப்பாளர் தடுத்தார்.
இந்நிலையில், பிரேசில் வீரர்கள் எதிர்வரும் ஆட்டங்களில் இதே ஆட்டத்திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்தினால் கிண்ணத்தை அக்குழு வெல்வதற்குச் சிறந்த வாய்ப்புள்ளது.