சென்னை: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 31 ஓட்டங்களில் வீழ்ந்து முதல் தோல்வியைத் தழுவியது. இந்தியாவின் தொடர் வெற்றிக்கு இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அணி கடைசிக் கட்டத்தில் விறுவிறுப்பாக ஆடாததே தோல்விக்குக் காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் டோனியையும் கேதார் ஜாதவையும் சாடி வருகின்றனர்.
கடைசிக் கட்ட ஆட்டத்தில் களத்தில் இருந்த டோனியும் கேதார் ஜாதவும் அதிரடியாக விளையாடாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. இருவரும் பெரும்பாலும் ஒவ்வோர் ஓட்டமாகவே எடுத்தனர். கடைசி ஐந்து ஓவர்களில் இருவரும் ஆடிய விதம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
அதிகமான ஓட்டங்கள் தேவைப்பட்ட அந்த ஆட்டத்தில் கேதார் ஜாதவ் 13 பந்துகளில் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். டோனி 31 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து இருந்தாலும் கடைசி நேரத்தில் அதிரடியை வெளிப்படுத்தாமல் ஒவ்வோர் ஓட்டமாக எடுத்தது ரசிகர்களை மிகுந்த கோபம் அடைய செய்தது. வெற்றி பெற வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லாமல் இருவரும் ஒவ்வொரு ஓட்டமாக எடுத்ததை இணையவாசிகள் 'மீம்ஸ்' போட்டு கிண்டல் செய்து உள்ளனர்.
"ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவரான டோனி பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை சிறப்பாக முடித்து வைத்தார்," என்று ரசிகர்கள் சிலர் பதிவில் தெரிவித்துள்ளனர்.
அதாவது பாகிஸ்தான் அரை இறுதிக்கு வரக்கூடாது என்பதற்காகவே டோனி=கேதார் ஜாதவ் ஜோடி இப்படி வேண்டுமென்றே ஆடியதாகச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் விமர்சகர்களும் இருவரது பந்தடிப்பையும் விமர்சித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதி ராக இருவரும் ஆமை வேகத்தில் ஆடியதை டெண்டுல்கர் விமர்சித்து இருந்தார். அதை உண்மையாக்கும் வகையில் டோனி=கேதார் இணையின் ஆட்டம் மந்தமாக இருந்தது.
அதே நேரத்தில் டோனிக்கு, அணித் தலைவர் கோஹ்லி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "டோனி பவுண்டரி அடிக்கவே கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் அவர்களது ஆட்டத்திறனில் மேம்பாடு இருக்கும்," என்றார். டோனியும் கேதார் ஜாதவும் பவுண்டரி அடிக்கவே முயன்றனர் என்று ரோகித் சர்மாவும் விளக்கம் அளித்துள்ளார்.

