செஸ்டர்-லி-ஸ்திரீட்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நியூசிலாந்தை 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்திய இங்கிலாந்து அணி, அரையிறுதியில் தொடர்ந்து மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என அதன் அணித் தலைவர் ஆய்ன் மோர்கன் சூளுரைத்துள்ளார்.
இப்போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து அணி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
“எமது அணி வீரர்களின் ஆட்டம் மிகவும் அருமையாக இருந்தது. தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினர்,” என்று புகழாரம் சூட்டிய மோர்கன், ஆட்ட நாயகன் ஜானி பேர்ஸ்டோவ் அடித்த சதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டதாகக் கூறினார்.
இப்போட்டியில் பேர்ஸ்டோவ் தொடர்ச்சியாக இரு சதங்களை அடித்துள்ளார். இங்கிலாந்து உடனான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய அவர், 106 ஓட்டங்களைக் குவித்தார். ஜேசன் ராய் 60 ஓட்டங்களும் மோர்கன் 42 ஓட்டங்களும் சேர்த்தனர்.
ஆட்டத்தின் 25வது ஓவருக்குப் பிறகு ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டதாக குறிப்பிட்ட மோர்கன், அதன் பிறகு ஒவ்வொரு பந்தடிப்பாளரும் எடுத்த ஓட்டங்களால் ஓட்ட எண்ணிக்கையை 305ஆக உயர்த்த முடிந்ததைச் சுட்டினார்.
இந்த ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து, முதலில் பந்தடிப்பைத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் மோர்கன் விளக்கினார்.
“ஒவ்வோர் ஆட்டத்திலும் 280 முதல் 300 ஓட்டங்கள் வரை எடுப்பது நல்ல ஓட்ட எண்ணிக் கையாகும். இங்கிலாந்தில் உள்ள அனைத்து ஆடுகளங்களும் நேரம் செல்லச் செல்ல மெதுவாகும். இதனால் பந்தடிப்பாளர்களுக்கு மிடில் ஓவர்களில் ஓட்டங்களை எடுப்பது சவாலானதே. இதனால் முதலில் பந்தடிப்பை நாங்கள் தேர்வு செய்தோம்,” என்றார் அவர்.
இப்போட்டியில் இதுவரை நியூசிலாந்து அணி மூன்று முறை தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தத் தோல்வி குறித்து அணித் தலைவர் வில்லியம்சன் கூறியதாவது, “தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வி அடைந்து இருப்பது கவலை தருகிறது. நாங்கள் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்துவது அவசியமாகும். 306 ஓட்ட இமாலய இலக்கு என்பது கடினமானதே. எங்களது பந்துவீச்சு நேர்த்தியாக இல்லை,” என்பதை ஒப்புக்கொண்டார்.
“இங்கிலாந்து அணி எங்களை அனைத்து துறைகளிலும் வெளியேற்றிவிட்டது. அந்த அணி வெற்றிக்குத் தகுதியானது. எங்களது பந்தடிப்பும் மோசமாக இருந் தது,” என்றார் அவர்.