போர்ட்டோ அலெக்ரி (பிரேசில்): பிரேசிலில் நடைபெற்று வரும் தென்னமெரிக்க நாடுகள் பங்குபெறும் கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியின் பரபரப்பான இரண்டாவது அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் நேற்று பெருவும் நடப்பு வெற்றியாளரான சிலியும் பொருதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு கோல்களை அடித்து முன்னணி வகித்த பெரு, ஆட்டம் முடிவடையவிருக்கும் 91வது நிமிடத்தில் மற்றொரு கோலைப் புகுத்தி 3-=0 கோல் எண்ணிக்கையில் சிலியை வீழ்த்தியது.
முதல் கோலை பெருவின் எடிசன் ஃபுளோரஸ் 21வது நிமிடத்தில் புகுத்த இரண்டாவது கோலை 38வது நிமிடத்தில் யோஷிமார் யோதுன் போட்டார். மூன்றாவது கோலை பாவ்லோ குயெர்ரோ அடித்தார்.
இப்போட்டியில் 44 ஆண்டு களுக்கு பிறகு முதன்முறையாக பெரு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில், காற்பந்து விளையாட்டில் உலகின் மிகச் சிறந்த நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகவும் பரம வைரிகளாகவும் பார்க்கப்படும் பிரேசில், அர்ஜெண்டினா மோதின. அந்த ஆட்டத்தில் பிரேசில் 2=0 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்குள் நுழைந்துவிட்டது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பெரு பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற விருக்கும் இறுதி ஆட்டத்தில் பிரேசில், பெரு குழுக்கள் மோது கின்றன.
நடப்பு போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் 5=0 எனும் கோல் எண்ணிக்கையில் பிரேசிலிடம் படுமோசமாக தோல்வியடைந்த பெரு, அதன் பிறகு மறுமலர்ச்சி கண்டது. இறுதி ஆட்டத்தில் தனக்குக் கிடைத்த தோல்விக்கு பழிதீர்க்க பெரு முனையும் என எதிர்பார்க்கலாம்.
லீக் ஆட்டத்தில் பிரேசிலிடம் பெரு படுதோல்வி அடைந்ததற்கு காரணமாக திகழ்ந்த அதன் கோல்காப்பாளர், நேற்றைய ஆட்டத்தில் நாயகனாக விளங் கினார். சிலியின் கோல் வேட்டைகளை அவர் முறியடித்தார்.