லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடந்தது.
இந்தப் போட்டியில் வீரர்களின் செயல்பாடுகளை வைத்து உலகக் கிண்ணக் கனவு அணியை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐ.சி.சி.) தேர்வுசெய்து திங்கட்கிழமை அறிவித்தது.
உலகக் கிண்ணக் கனவு அணியின் அணித் தலைவராகத் தொடர் நாயகன் விருது பெற்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெற்றியாளர் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியில் இருந்து அதிகபட்சமாக 4 வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.
இரண்டாவது இடம் பெற்ற நியூசிலாந்து அணியில் இருந்து 2 வீரர்கள் இடம்பிடித்து இருக்கிறார்கள்.
அரையிறுதியில் தோல்வி கண்ட இந்திய அணியில் ஓட்டக் குவிப்பில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா (5 சதம் உள்பட 648 ஓட்டங்கள்), வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (18 விக்கெட்) ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு இடம் கிடைக்கவில்லை.
அரையிறுதியில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த 2 வீரர்களுக்கு இடம் கிடைத்து இருக்கிறது.
லீக் சுற்றுடன் வெளியேறிய பங்ளாதேஷ் அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் ( 2 சதம் உள்பட 606 ஓட்டங்கள், 11 விக்கெட்) இடம் பிடித்துள்ளார்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கான கனவு அணி வீரர்களாக ஜாசன் ராய் (இங்கிலாந்து), ரோகித் சர்மா (இந்தியா), கேன் வில்லியம்சன் (கேப்டன், நியூசிலாந்து), ஜோரூட் (இங்கிலாந்து), ஷகிப் அல்-ஹசன் (பங்ளாதேஷ்), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர், ஆஸ்திரேலியா), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து), பெர்குசன் (நியூசிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.