அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக இத்தாலியின் இன்டர் மிலான் காற்பந்துக் குழு நேற்று சிங்கப்பூர் வந்தடைந்தது.
வரும் சனிக்கிழமை நடக்கவுள்ள ஆட்டத்தில் இன்டர் மிலான், மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடன் மோதவிருக்கிறது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்டியானோ ரொனால்டோவின் யுவென்டஸ் குழு, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை எதிர்த்தாட இருக்கிறது.
இதையடுத்து, அந்நான்கு குழுக்களில் முதல் குழுவாக இன்டர் மிலான் சிங்கப்பூர் வந்து சேர்ந்தது. தேசிய விளையாட்டரங்கில் யுனைடெட் குழுவுடன் அக்குழு மோதும் ஆட்டத்திற்கான நுழைவுச்சீட்டுகள் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
ஜேடபிள்யூ மரியாட் ஹோட்டலுக்கு வருகை தந்த இன்டர் மிலான் குழுவினரை வரவேற்பதற்காக கிட்டத்தட்ட 20 ரசிகர்கள் காத்திருந்தனர். தங்களின் விருப்பத்திற்குரிய ஆட்டக்காரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும் கையெழுத்து வாங்கியும் அந்த ரசிகர்கள் தங்களின் ஆவலைத் தீர்த்துக்கொண்டனர்.
இன்டர் மிலான் வீரர்கள் பலரும் களைப்புடன் காணப்பட்ட நிலையில், பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த ரட்யா நைங்கோலான், தங்களை வரவேற்கக் காத்திருந்த ரசிகர்கள் பலருடன் ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார்; கையெழுத்தும் போட்டுத் தந்தார்.
செல்சி காற்பந்துக் குழுவின் முன்னாள் நிர்வாகியான அன்டோனியோ கோன்டேதான் இன்டர் மிலான் குழுவின் இப்போதைய நிர்வாகி. கடந்த மே மாதத்தில் லூக்கஸ் ஸ்பலெட்டி விலகிய பிறகு அப்பொறுப்பு கோன்டே வசம் வந்து சேர்ந்தது.
கோன்டே நிர்வாகத்தின்கீழ் இன்டர் மிலான் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே வெற்றி கிடைத்தது. சுவிட்சர்லாந்தின் லுகானோ குழுவிற்கெதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நட்புமுறை ஆட்டத்தில் இன்டர் மிலான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைச் சுவைத்தது.