அகமதாபாத்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்கெனவே கைவிட்டுப்போன நிலையில், சிரியாவுடனான ‘இன்டர்கான்டினென்டல்‘ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இந்தியா 1-1 எனச் சமநிலை கண்டது.
இவ்விரு அணிகளுடன் தஜிகிஸ்தான், வடகொரியா என மொத்த நான்கு அணிகள் பங்குகொள்ளும் இந்தக் காற்பந்துத் தொடர் இம்மாதம் 7ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது.
தலா இரு வெற்றிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்த தஜிகிஸ்தானும் வடகொரியாவும் நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இந்நிலையில், வெற்றி தோல்வியால் எந்த விளைவும் ஏற்படாத இறுதி லீக் ஆட்டத்தில் இந்தியாவும் சிரியாவும் மோதின. இதில், 18 வயதேயான இந்திய வீரர் நரேந்தர் கலோட் 52வது நிமிடத்தில் கோலடித்து தமது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆயினும், 78வது நிமிடத்தில் சிரிய வீரர் ஃபிராஸ் அல் காத்திப் பதில் கோலடித்து ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தார்.