புதுடெல்லி: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதை அடுத்து அவ்வணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படி எதையும் இதுவரை டோனி அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் டோனிக்கு இடம் கிடைக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்குத் தம்மைத் தேர்வுசெய்ய வேண்டாம் என டோனியே இந்திய அணித் தேர்வுக்குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா‘ செய்தி தெரிவிக்கிறது.
இனிமேல், இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் இடத்திற்கு ரிஷப் பன்ட்டே முதல் தெரிவாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ‘‘டோனி 15 பேர் கொண்ட அணியில் ஒருவராக இருப்பார். ஆனால், விளையாடும் பதினொருவரில் ஒருவராக இருக்கமாட்டார். ஒரு வழிகாட்டியாக அணியில் அவர் இருப்பார்,’’ என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.