இங்கிலாந்தின் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவினர் அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க சிங்கப்பூர் வருவதை அறிந்த சிங்கப்பூர் ரசிகர்கள் நேற்று காலை 7.00 மணி ஓரியேண்டல் மரினா ஹோட்டலில் குழுமினர்.
வார நாளான நேற்று பள்ளிகள் திறந்திருப்பதும் பலர் வேலைக்குச் செல்ல வேண்டி இருந்ததும் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
இவர்களின் ஆவலை ஈடுசெய்யும் விதமாக காலை 9.00 மணிவாக்கில் ஸ்பர்ஸ் வீரர்கள் சாங்கி விமான நிலையத்திலிருந்து பஸ்ஸில் வந்திறங்கினர். அதிலிருந்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஸ்பர்ஸ் குழுவின் கேப்டன் ஹேரி கேன், அந்தக் குழுவின் தென்கொரிய நட்சத்திர வீரர் சோன் ஹியூங் மின் ஆகியோர் முதலில் இறங்கினர்.
நீல, ஊதா நிறங்களிலான பெட்டிகளுடன் வந்த வீரர்களின் முகங்களில் லண்டன் நகரிலிருந்து நீண்ட இரவுப் பயணம் மேற்கொண்ட களைப்புத் தெரிந்தது.
அதை சற்றும் பொருட்படுத்தாமல் ஹேரி கேன், சோங் ஹியூங் மின்னுடன் சாம்பியன்ஸ் லீக் கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டியில் அயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவுக்கு எதிராக மூன்று கோல்கள் போட்ட லுக்கஸ் மோராவும் ரசிகர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க படம் எடுத்துக்கொள்வது, ரசிகர்கள் நீட்டிய புத்தகங்களில் கையெழுத்து போடுவது என சுறுசுறுப்பாக இயங்கினர்.
இவர்களைப் போலவே குழுவின் நிர்வாகியான மொரிசியோ பொக்கெட்டினோவும் ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்தார்.
இவர்களைக் காண வந்த ரசிகர்கள் இங்கிலாந்து நாடு, ஸ்பர்ஸ் குழுவின் நினைவுப் பொருட்களுடன் வந்திருந்தனர்.
சிங்கப்பூர் தேசிய விளை யாட்டரங்கில் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள போட்டிகளில் ஸ்பர்ஸ் குழுவுடன், இன்டர் மிலான், யுவென்டஸ், மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய குழுக்கள் பங்கேற்கின்றன.
இதில் முதல் ஆட்டமாக நாளை மான்செஸ்டர் யுனைடெட்டும் இன்டர் மிலான் குழுக்கள் பலப் பரிட்சையில் ஈடுபடவுள்ளன.
இதைத் தொடர்ந்து ஞாயிறன்று யுவென்டஸ் குழுவும் ஸ்பர்ஸ் குழுவும் மோதுகின்றன.