சாம்பியன்ஸ் லீக் காற்பந்தின் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியிடம் 2-0 என தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஸ்பர்ஸ் அணியின் நிர்வாகியாக இருப்பதிலிருந்து தாம் விலக எண்ணியதாகவும் பின்னர் அதிலிருந்து ஸ்பர்ஸ் அணியை மீண்டும் உயிர்பெறச் செய்யும் எண்ணத்துடன் அதில் தொடர்ந்திருக்க முடிவு செய்ததாக டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணியின் நிர்வாகி மொரிசியோ பொக்கெட்டினோ கூறிஉள்ளார்.
லிவர்பூல் அணியிடம் தோற்றது இதயத்தை சுக்குநூறாக்கியது, அது மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்று கூறிய பொக்கெட்டினோ, ஆனால் அதுவே தாம் ஸ்பர்ஸ் அணியில் தொடர்ந்திருப்பதற்குக் காரணம் என்றும் விளக்கினார்.
இந்தக் காற்பந்துப் பருவத்தில் அவர் அளித்த முதல் நேர்காணலில் பொக்கெட்டினோ, “ஒருவேளை அந்த ஆட்டத்தின் முடிவு வேறு விதமாக இருந்திருந்தால், ஸ்பர்ஸ் அணியைவிட்டு வெளியேறி வேறு ஓர் அணியில் புதியதொரு சவாலை புதிய சூழலில் எதிர்கொள்வது பற்றி சிந்தித்திருப்பேன்.
“ஆனால், சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இப்படியொரு தோல்விக்குப் பின் வெளியேறுவது என்பது, நான் பிரச்சினைகளை விட்டோ அல்லது இக்கட்டான நிலையிலிருந்து தப்பிக்கும் எண்ணத்துடனோ வெளியேறுபவன் நானல்ல. எனக்கு முன்னால் உள்ள பெரும் சவாலை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
“அதிலும் வீரர்களின் மனநிலையைத் தூக்கி நிறுத்தி அடுத்த காற்பந்துப் பருவத்தில் வெற்றி பெறும் வாய்ப்பை உருவாக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு உத்வேகத்தை அளிக்கிறது, ஊக்க மூட்டுகிறது.
ஸ்பர்ஸ் குழு சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை ெவன்றிருந்தால் தாம் வேறு மாதிரியாக யோசித்திருக்கக்கூடும் என்ற பொக்கெட்டினோ, “ஏனெனில், வெற்றி வேறு விதமான சவால்களை நோக்கி மனம் செல்லத் தூண்டலாம்,” என்று கூறினார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் பொக்கெட்டினோ ரியால் மட்ரிட், மான்செஸ்டர் யுனைெடட் போன்ற மற்றோர் அணியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் என்ற பேச்சு அடிபட்டது.
ஆனால், ரியால் மட்ரிட் குழு முந்தைய நிர்வாகியான ஸினடின் ஸிடானை மீண்டும் நிர்வாகியாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும், மான்செஸ்டர் யுனைடெட் ஒலே குனார் சோல்சியாரை நிர்வாகியாக நியமித்துள்ள நிலையிலும் அதற்கான வாய்ப்பில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
எது எப்படியோ, தாம் 2014ஆம் ஆண்டில் ஸ்பர்ஸ் நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டபின் அந்த அணி அடைந்துள்ள முன்னேற்றம் பெருமைப்படக்கூடிய ஒன்று என்று அவர் தெரிவித்தார்.