தள்ளிப்போகும் வெற்றியாளர் பட்டம் ஜப்பான் போட்டியில் கிடைக்கும்: சிந்து நம்பிக்கை

தள்ளிப்போகும் வெற்றியாளர் பட்டம் ஜப்பான் போட்டியில் கிடைக்கும்: சிந்து நம்பிக்கை

1 mins read
d6a6d686-3ae9-47a1-9085-28a5f1c70694
இந்தியாவின் முன்னணி பூப்பந்தாட்ட வீராங்கனை பி.வி.சிந்து. படம்: ஊடகம் -

தோக்கியோ: கடந்த ஏழு மாதங்களாக வெற்றியாளர் பட்டத்தை வெல்ல முடியாமல் தவிக்கும் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் பொது விருதுப் போட்டியில் சாதிக்கப் போவதாக சூளுரைத்துள்ளார்.

நடந்து முடிந்த இந்தோனீசிய பொது விருது பேட்மிண்டன் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த சிந்து, நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் அகேனா யமகுச்சியிடம் நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

சிந்துவால் கடந்த ஏழு மாதங்களாக ஒரு வெற்றியாளர் பட்டத்தைக்கூட வெல்லமுடியவில்லை.

இன்று தொடங்கும் ஜப்பான் பொது விருது பேட்மிண்டன் தொடரில் இந்த நிலை ஒரு முடிவுக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

''ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் இந்தோனீசிய பொது விருது பேட்மிண்டன் எனக்கு சிறப்பான தொடராக அமைந்தது. இந்தத் தொடரின் உத்வேகத்தை ஜப்பானிய தொடருக்கும் எடுத்துச்செல்ல முடியும் என்று நம்புகிறேன்,'' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தோனீசிய தொடரில் உடற்தகுதி காரணமாக விளையாடாத சாய்னா நேவால், ஜப்பானிய தொடரில் விளையாடுகிறார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணோய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.