லண்டன்: கிரிக்கெட் ரசிகர்களால் உலகக் கிண்ணம் கொண்டாடப்படுவதை போலவே, ஆஷஸ் தொடரும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அடுத்த மாதம் 1ம்தேதி தொடங்க உள்ளது.
இதில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆஷஸ் தொடரில் விளையாடும் வீரர்கள், தங்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ள மேலாடையுடன் விளையாடவுள்ளனர்.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்கள் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், 'டெஸ்ட் கிரிக்கெட் மேலாடைகளில் வீரர்களின் எண்களும், பெயர்களும் இடம் பெற்றுள்ளன' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவுடன் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டின் புகைப்படம் இணைந்து உள்ளது.
டி20, ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெயர், எண் கொண்ட மேலாடையை அணிந்து வீரர்கள் விளையாடி வந்தனர்.
ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அப்படி எதுவும் இல்லாத சூழலில், மேலாடையில் வீரர்களின் பெயர்கள், எண்கள் வரலாற்றிலேயே முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

