தோக்கியோ: அடுத்தாண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளும், அதற்கு அடுத்த மாதம் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
ஜப்பானின் தொழில்நுட்ப வளர்ச்சியை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளில் அதிநவீன தொழில்நுட்பத்தை ஜப்பான் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக் மைதானங்கள் உருவாக்குவதற்கான கட்டுமானப் பணிகளில் ஜப்பான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தேவையான புதிய நிலையான அரங்குகளில் பாதியை ஜப்பான் கட்டி முடித்து விட்டது. வெகுவிரைவில் ஒலிம்பிக்கிற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் முடிப்பதற்கு ஜப்பான் ஈடுபாட்டுடன் களமிறங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை ஜப்பான் களமிறக்க உள்ளது. பார்வையாளர்களை வரவேற்பது, போட்டிகளுக்கும் போட்டியாளர்களுக்கும் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வது வரை அனைத்து வேலைகளையும் இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் செய்யும். மினியேச்சர் ரிமோட் கண்ட்ரோல்ட் வாகனங்கள், செயற்கை நுண்ணறிவுடன் தானாக ஓட்டிச்செல்லும் ரோபோ வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ரோபோ, மின்சார வாகனங்கள் என அனைத்திலும் ரோபோ தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளனர்.

