கடந்த வாரம் நடைபெற்ற ஃபினா உலக நீச்சல் விருதுப் போட்டிகளில் தாம் பங்கேற்ற எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறாமல் வெறுங்கையாய் நாடு திரும்பியுள்ள சிங்கப்பூரின் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், உலகின் சிறந்த நீச்சல் வீரர்கள் பட்டியலில் தமது பெயர் இன்னும் உள்ளது என்று உறுதியாக நம்புகிறார்.
“நான் என் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளேன். அதிலிருந்து ஓர் இம்மியளவும் குறையவில்லை. இங்கு எனக்குக் கடும் போட்டி கொடுத்தவர்கள் என்னை உயர்ந்த நிலையில் வைத்திருக்க உதவியிருக்கிறார்கள்.
“உலகச் சாதனையை ஒருவர் முறியடித்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று திரு ஸ்கூலிங் ‘த சண்டே டைம்ஸ்’ செய்தித்தாளிடம் கூறினார்.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் 50.39 வினாடிகளில் நீந்தி தங்கம் வென்ற ஸ்கூலிங், கடந்த ஈராண்டுகளாகப் பங்கேற்ற அதே போட்டியில் 51 வினாடிக்குக் கீழ் போட்டியை முடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, அடுத்த ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில் ஸ்கூலிங்கால் ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தங்கம் வெல்ல முடியாது என்று விளையாட்டு கவனிப்பாளர்கள் கூறியிருந்தாலும் அதை ஒரு பொருட்டாக ஸ்கூலிங் எடுத்துக்கொள்ளவில்லை.
“ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 12 மாதங்கள் உள்ளன. அதற்குள் கடுமையாகப் பயிற்சி செய்து எனது சாதனைகளைத் தக்கவைத்துக்கொள்ள பாடுபடுவேன்,” என்று ஸ்கூலிங் சூளுரைத்திருக்கிறார்.