லண்டன்: தன்னைவிட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்குத்தான் நெருக்கடி அதிகம் உள்ளது என்று கூறியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய்.
உலகக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வெல்வதற்கு ஜேசன் ராயின் ஆட்டமும் முக்கிய காரணமாக அமைந்தது.
இதையடுத்து, முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இங்கிலாந்து அணியிலும் இடம் பிடித்தார் ஜேசன் ராய்.
கடந்த வாரம் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்கள் எடுத்தார் ராய்.
எனவே ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் ஜேசன் அபாரமாக ஆடி, இங்கிலாந்துக்கு வலுவான அடித்தளம் அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், அவருக்கு நெருக்கடி அதிகம் இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஜேசன் ராய், நெருக்கடி தனக்கு அல்ல, ஆஸ்திரேலிய அணிக்குத்தான் என்று கூறியுள்ளார்.
"ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடப்போவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்," என்றார்.

