லண்டன்: இன்று ஆர்சனலும் நியூகாசலும் மோதுகின்றன. ஆர்சனலின் இப்பருவத்துக்கான முதல் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் அக்குழுவின் நட்சத்திர வீரர்கள் மெசுட் ஒசிலும் சியாட் கொலாசினாச்சும் களமிறங்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் குறித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்சனல் குழுவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் ஒசில், கொலாசினாச் பயணம் செய்த காரைத் திருட ஆயுதம் ஏந்திய சிலர் முயற்சி செய்தனர்.
அந்தக் கும்பலை எதிர்கொள்ள கொலாசினாச் பாய்ந்தபோது ஒசில் அங்கிருந்து காரை ஓட்டிச் சென்று தப்பினார்.
கொலாசினாச்சுக்கு உதவியாக அங்கிருந்தோர் விரைந்ததை அடுத்து கார் திருடும் கும்பல்
விரட்டியடிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் குறித்து ஒசில், கொலாசினாச் ஆகியோரிடம் போலிசார் விசாரணை நடத்தியதை அடுத்து, அவர்கள் இருவரும் நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பெறமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஆட்டக்காரர்களின் நலனுக்கு முன்னிரிமை கொடுக்கப்படும் என்று ஆர்சனல் தெரிவித்துள்ளது.
போலிசாருக்கு ஒத்துழைப்பு தரும் அதே வேளையில், சம்பந்தப்பட்ட ஆட்டக்காரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான ஆதரவை வழங்கி வருவதாக அது கூறியது.

