லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் நடப்புப் பருவம் கடினமாக இருக்கப்போகிறது என்று கூறினார் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுத் தலைவர் ஹேரி கேன்.
நேற்று அதிகாலை நடந்த ஆஸ்டன் வில்லா குழுவிற்கு எதிரான ஆட்டத்தைக் கடும் கலக்கத்திற்குப் பிறகு ஸ்பர்ஸ் வென்ற நிலையில், அவர் இவ்வாறு கூறினார்.
கடைசி 20 நிமிடம் வரை ஸ்பர்ஸ் கோல் போடாத நிலையில், 20வது நிமிடத்தில் போட்ட கோலால் முன்னிலையில் நீடித்தது புதிதாக இபிஎல் பட்டியலில் இணைந்த ஆஸ்டன் வில்லா.
எனவே, வெற்றி வாய்ப்பு குறைவாகக் காணப்பட்டதால், ஸ்பர்ஸ் தோற்றுவிடுமோ என்ற நிலை நிலவியது.
மந்தமாக விளையாடிய ஸ்பர்ஸ். தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ்டியன் எரிக்சன் வரவால், தாக்குதல் ஆட்டத்தில் சூடுபிடித்தது.
அதைத் தொடர்ந்து, ஸ்பர்ஸ் குழுவில் புதிதாக இணைந்த டாகுவே நோடொம்பிளே 73வது நிமிடத்தில் தன் குழுவிற்கான முதல் கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.
அவரைத் தொடர்ந்து, கடைசி நான்கு நிமிடத்தில் ஹேரி கேன் இரண்டு கோல்கள் போட்டு 3-1 என டோட்டன்ஹம்மை வெற்றி பெறச் செய்தார்.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ஹேரி கேன், “லிவர்பூல், டோட்டன்ஹம் குழுக்கள் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், இப்பருவம் கடும் சவாலான ஒன்றாக இருக்கப் போகிறது.
“நாங்கள் வெற்றியோடு தொடங்கியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. இருந்தாலும் முன்னேற்றப் பாதையில் செல்ல இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
“போட்டித்தன்மை கொண்ட குழுவாக இருக்க வேண்டியதற்கு எட்ட வேண்டிய நிலை குறித்து டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிற்குத் தெரியும்,” என்றார்.
இன்னோர் ஆட்டத்தில் வாட்ஃபர்ட் குழுவை 3-0 என வீழ்த்தியது பிரைட்டன். கடந்த பருவத்தில் குறுகிய புள்ளிகள் இடைவெளியில் ரெலிகேஷன் நிலையில் இருந்து தப்பித்த பிரைட்டன் தனது புதிய நிர்வாகி கிரஹம் போட்டரின் கீழ் முதல் வெற்றியை ருசித்தது.
எவர்ட்டன், கிறிஸ்டல் பேலஸ் குழுக்கள் மோதிய ஆட்டம் கோல் எதுவும் இன்றி சமநிலையில் முடிந்தது.