துருக்கி: ஆகஸ்ட் 15ஆம் தேதி (சிங்கப்பூர் நேரப்படி) அதிகாலை 3 மணிக்கு ஐரோப்பிய 'சூப்பர் கப்' கிண்ணத்திற்காக இரண்டு இங்கிலிஷ் குழுக்கள் பொருதவுள்ளன.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடக்கவுள்ள அந்த ஆட்டத்தில் லிவர்பூல் குழுவும் செல்சி குழுவும் பொருதும்.
இந்த மாபெரும் இறுதி ஆட்டத்தில் காற்பந்து நடுவர் பொறுப்பைக் கையாளவுள்ளார் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்தெப்பனி ஃப்ரப்பர்ட் (Stephanie Frappart).
ஐரோப்பிய காற்பந்து போட்டிகளில் ஒரு முக்கியமான ஆட்டத்தில் நடுவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முதல் பெண்மணி என்ற பெருமை இவரைச் சேரும்.
35 வயது ஃப்ரப்பர்ட் பெண் நடுவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார். இவ்வாண்டு தொடக்கத்தில் இவர் தமது சொந்த நாட்டின் ஆண்கள் காற்பந்து லீக் ஆட்டத்தில் நடுவராகப் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் ஃப்ரப்பர்ட் சிறப்பாகச் செயல்பட்டதால் அவரை இந்த 'சூப்பர் கப்' போட்டியின் நடுவராகத் தெரிவு செய்ய முடிவெடுத்ததாக ஐக்கிய ஐரோப்பிய காற்பந்து சம்மேளன நடுவர்களின் தலைவர் திரு ரோபெர்ட்டோ ரொசெர்ட்டி தெரிவித்தார்.
போட்டியிடும் இங்கிலிஷ் குழு நிர்வாகிகள் இருவரும், ஃப்ரப்பர்ட் ஆட்டத்தில் நடுவராகப் பொறுப்பு வகிப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டனர்.

