மும்பை: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் (படம்: ஏஎஃப்பி) விவகாரத்தில் இரட்டை ஆதாய பிரச்சினை இல்லை என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
டிராவிட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பதவி வகித்ததால் இந்த நியமனத்தில் இரட்டை ஆதாயம் முரண்பாடு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் விளக்கம் கேட்டு டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த நோட்டீசுக்கு டிராவிட் பதில் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. பின்னர் நிர்வாகக் குழு உறுப்பினர் ரவி தோஜ்டே அளித்த பேட்டியில், “டிராவிட் நியமனம் விஷயத்தில் இரட்டை ஆதாயம் பிரச்சினை எதுவும் இல்லை. அவரது நியமனத்துக்கு நிர்வாகக் குழு அனுமதி அளித்துவிட்டது.
“நன்னடத்தை அதிகாரி இரட்டை ஆதாய பிரச்சினை இருப்பதாகக் கருதினால் அதற்கு நாங்கள் விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளோம்.
“இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
“கபில்தேவ் தலைமையிலான குழு புதிய பயிற்சியாளரை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தேர்வு செய்யும்,” என்றார்.
சில தினங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகிகள் குழுத் தலைவர் வினோத் ராய்யும் டிராவிட்டிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.