பாரிஸ்: காற்பந்து ஆட்டக்காரர்களை விற்பது, வாங்குவது, 18 வயதுக்கு குறைந்த வீரர்களைப் பதிவு செய்வது ஆகியவற்றில் விதிமுறைகளை அத்துமீறியதாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மான்செஸ்டர் சிட்டி குழு ஒப்புக்கொண்டுள்ளது.
உலகக் காற்பந்து ஆளுமை அமைப்பான ஃபிஃபா இந்த தகவலை நேற்று முன்தினம் அறிவித்தது. இதன் அடிப்படையில், எதிர்வரும் காலத்தில் ஆட்டக்காரர்களை விற்க, வாங்க சிட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
ஆனால், அதற்குப் பதிலாக அக்குழுவிற்கு 315,000 பவுண்டு அபராதத்தை ஃபிஃபாவின் ஒழுங்குமுறை நடவடிக்கைக் குழு விதித்துள்ளது.
தண்டனை விதிப்பதில், மான்செஸ்டர் சிட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டது கருத்தில்கொள்ளப்பட்டதாக ஃபிஃபா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவின் மத்திய திடல் ஆட்டக்காரர் பெஞ்சமின் காரேவை ஒப்பந்தம் செய்ததன் தொடர்பில் சிட்டி தவறிழைக்கவில்லை என்று கடந்த ஆண்டு ஃபிஃபா தீர்ப்பளித்திருந்தது. பெஞ்சமின் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அவருக்கு 16 வயது பூர்த்தியானது.
மற்றொரு சம்பவத்தில், ஆட்டக்காரர் ஜேடன் சாஞ்சோவின் முகவருக்கு 200,000 பவுண்டு மதிப்பிலான பணத்தை சிட்டி செலுத்தியதாக எழுந்த புகார் குறித்து தான் விசாரணை நடத்துவதாக இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் கடந்த பிப்ரவரியில் கூறியிருந்தது. வாட்ஃபர்ட் குழுவில் அப்போது விளையாடிக்கொண்டிருந்த சாஞ்சோவுக்கு வயது 14 மட்டும்தான்.
இளம் ஆட்டக்காரர்களுக்கு 16 வயது பூர்த்தியாகும் வரை முகவர் ஒருவரால் அவர்கள் பிரதிநிதிக்கப்படக்கூடாது என்று காற்பந்துச் சங்கத்தின் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிட்டியிலிருந்து பின்னர் விலகிய சாஞ்சோ, ஜெர்மனியின் பொருஷியா டோர்ட்மண்ட் குழுவில் இணைந்தார். இப்போது இங்கிலாந்து தேசிய காற்பந்துக் குழுவில் அவர் இடம்பெற்றுள்ளார்.
இளம் வயது ஆட்டக்காரர்களைக் குழுவில் சேர்ப்பதன் தொடர்பில் விதிமுறைகளை அத்துமீறிய குற்றத்தை செல்சி குழுவும் முன்னதாக ஒப்புக்கொண்டது. ஆட்டக்காரர்களை வாங்குவது, விற்பது தொடர்பில் செல்சிக்குக் கடந்த பிப்ரவரியில் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஃபிஃபாவின் விதிமுறைகளை அத்துமீறியதன் தொடர்பில் ஸ்பெயினின் பார்சிலோனா, ரியால் மட்ரிட், அட்லெட்டிகோ மட்ரிட் ஆகிய குழுக்களுக்கும் ஆட்டக்காரர்களை வாங்க, விற்க முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்தது.