லண்டன்: செல்சியை ‘பெனால்டி ஷூட்அவு’ முறையில் வென்று நான்காவது முறையாக சூப்பர் கிண்ணத்தைக் கைப்பற்றியது லிவர்பூல்.
இக்குழுக்கள் மோதிய கடைசி 10 ஆட்டங்களில் ஒன்றில் மட்டும்தான் ஒன்றுக்கு மேற்பட்ட கோல் வித்தியாசத்தில் வெற்றி தீ்ர்மானிக்கப்பட்டது. மற்ற ஆட்டங்கள் சமநிலையிலோ, ஒரு கோல் வித்தியாசத்திலோ முடிந்தன.
எனவே, நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்திலும் வெற்றி யாருக்கு என்பதைக் கணிக்க முடியாத நிலையில் பரபரபப்பாக இருந்தது.
இவ்வாட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.
அலிசன் இல்லாத குறை தெரியாமல், பெனால்டி ஷூட் அவுட்டில் லிவர்பூலைக் காப்பாற்றினார் அக்குழுவின் புதிய கோல் காப்பாளர் ஏட்ரியன்.
செல்சியின் டேமி ஆப்ரகாம் உதைத்த பந்தை எளிதாகத் தடுத்து லிவர்பூலுக்கு கிண்ணத்தைப் பெற்று தந்தார் ஏட்ரியன்.
ஆட்டக்காரர்களை வாங்க, விற்பதற்கான காலக்கட்டத்தில் வெஸ்ட் ஹேம் குழுவில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஏட்ரியனை இம்மாத தொடக்கத்தில் இலவசமாக லிவர்பூல் குழுவில் நிர்வாகி கிளோப் சேர்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய முற்பாதி ஆட்டத்தில் செல்சியை முன்னிலை பெறச் செய்தது ஒலிவியர் ஜிரூ போட்ட கோல்.
அதற்குப் பதிலாக 48, 95வது நிமிடத்தில் இரட்டை கோல் போட்டு லிவர்பூலை முன்னிலைப் பெறச் செய்தார் சாடியோ மனே.
காயம்பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது செல்சி இன்னோர் கோல் போட்டதால் ஆட்டம் 2-2 எனச் சமநிலை பெற்றது.
இபிஎல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிடம் நான்கு கோல்கள் வித்தியாசத்தில் தோற்றது செல்சி.
நேற்றைய ஆட்டத்தில் பல மாற்றங்களுடன் களமிறங்கினாலும் இப்பருவத்தில் இரண்டாவது தொடர் தோல்வியைத் தழுவியது.