சென்னை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான வி.பி.சந்திரசேகர் (படம்) நேற்று முன்தினம் மரணமடைந்தார். இவருக்கு வயது 57.
மைலாப்பூரில் உள்ள தம் வீட்டில் சந்திரசேகர் தம்முயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 1988 முதல் 1990 வரை ஏழு போட்டிகளில் விளையாடிய இவர், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இந்திய அணித் தேர்வுக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
ஐபிஎல்லின் தொடக்க கட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாளராகவும் இவர் இருந்தார்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் அணிகளுள் ஒன்றான காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளரான இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.
“வெகுநேரம் அறைக்கதவைத் தட்டியும் திறக்காததால் சன்னல் வழியாகப் பார்த்தபோது மின்விசிறியில் அவர் தூக்கில் தொங்கியது தெரிந்தது.
“கிரிக்கெட் தொடர்பான தொழில்களில் இழப்பு ஏற்பட்டுவிட்டதால் மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் கூறிவந்தார்” என்று மறைந்த சந்திரசேகரின் மனைவி சொன்னார்.
இவரது மறைவிற்கு டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.