மட்ரிட்: இந்தப் பருவ ஸ்பானிய லா லீகா காற்பந்துத் தொடரைத் தோல்வியுடன் தொடங்கியுள்ளது நடப்பு வெற்றியாளரான பார்சிலோனா குழு.
அத்லெட்டிக் பில்பாவ் குழுவிற்கெதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்றுப் போனது.
வலது கெண்டைக்கால் காயம் காரணமாக நட்சத்திர ஆட்டக்காரரான லயனல் மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இன்னொரு முன்னணி வீரரான லூவிஸ் சுவாரெசும் ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் காயமடைந்து வெளியேறியது பார்சிலோனாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
அட்லெட்டிகோ மட்ரிட் குழுவிடம் இருந்து 120 மில்லியன் யூரோ விலைகொடுத்து வாங்கப்பட்ட பிரெஞ்சுத் தாக்குதல் ஆட்டக்காரர் அன்டுவான் கிரீஸ்மன் இந்த ஆட்டத்தில் விளையாடியும் பார்சிலோனாவுக்குப் பலனேதும் விளையவில்லை. அவரது அறிமுக ஆட்டம் மறக்கப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துபோனது.
ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் பில்பாவ் குழு சார்பில் மாற்று ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட்ட 38 வயது ஸ்பானிய தாக்குதல் ஆட்டக்காரர் அரிட்ஸ் அடூரிஸ், அடுத்த நிமிடத்திலேயே ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அற்புதமான கோல் அடித்து தமது குழுவிற்கு வெற்றி தேடித் தந்தார். அவர் இந்தப் பருவத்துடன் காற்பந்தில் இருந்து ஓய்வுபெறுவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக, தொடர்ந்து 15 பருவங்களாக லா லீகாவில் கோல் அடித்துள்ள ஆட்டக்காரரும் இவர்தான்.
பார்சிலோனாவின் இப்போதைய நிர்வாகியான வல்வெர்டே, பில்பாவ் குழுவின் நிர்வாகியாக இருந்தபோது அடூரிசுடன் நான்கு ஆண்டுகள் இணைந்து பணியாற்றியுள்ளார்.
“அடூரிஸ் பந்தை வலையை நோக்கி உதைக்க ஆயத்தமானபோது என்ன நடக்கும் எனத் தெரிந்துவிட்டது. அந்தப் பகுதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் அவர். ஆதலால், அவரது அந்த அற்புதமான கோல் என்னிடத்தில் எந்த வியப்பையும் ஏற்படுத்தவில்லை,” என்றார் வல்வெர்டே.
பார்சிலோனா பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியபோதும் அவற்றுள் ஒன்றுகூட கோலாகவில்லை. சிலமுறை பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது.
கடைசியாக, 2008-09 லா லீகா பருவத்தின் முதல் ஆட்டத்தில் பார்சிலோனா 0-1 என்ற கோல் கணக்கில் நுமன்சியா குழுவிடம் தோற்றிருந்தது.