மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழுக்கள் பொருதின. சிட்டியின் சொந்த அரங்கில் நடந்த இந்த ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. சொந்த மண்ணில் நடந்த ஆட்டம் ஒன்றில் சிட்டி வெற்றி பெறாதது கிட்டத்தட்ட எட்டு மாதங்களில் இதுவே முதன்முறை.
ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சிட்டியின் தாக்குதல் ஆட்டக்காரர் கேப்ரியல் ஜேசுஸ் வலைக்குள் பந்தைப் புகுத்தினார். ஆட்டத்தை வென்றுவிட்டதாக கொண்டாட்ட மழையில் நனைந்த சிட்டி வீரர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
ஜேசுஸ், பந்தை வலைக்குள் புகுத்துவதற்கு முன்னதாக சிட்டியின் தற்காப்பு ஆட்டக்காரர் ஐமெரிக் லப்போர்ட்டேவின் கையில் பந்து பட்டுவிட்டது ‘விஏஆர்’ தொழில்நுட்ப ஆய்வில் தெரியவந்தது. இதனால் ஜேசுசின் வெற்றி கோல் மறுக்கப்பட்டது.
இவ்வாண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இவ்விரு குழுக்களும் மோதின. அப்போதும் சிட்டியின் வெற்றி கோலை விஏஆர் தொழில்நுட்பம் மறுத்துவிட்டது. இதனால், போட்டியிலிருந்து சிட்டி வெளியேறியது.
பெல்ஜியத்தைச் சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரர் கெவின் டி பிரய்ன, இந்த ஆட்டத்தில் பெரும் பங்கை அளித்தார். ரஹீம் ஸ்டெர்லிங், செர்ஜியோ அகுவேரோ ஆகியோர் போட்ட சிட்டியின் இரு கோல்களுக்கும் டி பிரய்ன வித்திட்டார். கடந்த இபிஎல் பருவத்தில் டி பிரய்னவிற்கு காயம் ஏற்பட்டதால் அவரால் சிட்டிக்கு பெரியளவில் பங்காற்ற முடியவில்லை.
வழக்கம்போல சிட்டியின் அபார ஆட்டத்திறன் இந்த ஆட்டத்திலும் வெளிப்பட்டது. ஆனால், தாங்களும் எவருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஸ்பர்ஸ் ஆட்டக்காரர்களும் கடுமையாகப் போராடினர். ஸ்பர்ஸ் தரப்பில் எரிக் லமேலாவும் லூகஸ் மோராவும் கோல்களைப் போட்டனர்.
சிட்டிக்கு வெற்றி மறுக்கப்பட்டாலும் தமது வீரர்கள் விளையாடிய விதம் குறித்து நிர்வாகி பெப் கார்டியோலா புகழாரம் சூட்டினார்.
“ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்த குழுக்களில் ஒன்றான ஸ்பர்சுக்கு எதிராக நாங்கள் மிக நன்றாக விளையாடினோம். எமது வீரர்கள் மிகச் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஆட்டங்களில் இதுவும் ஒன்று,” என்றார் அவர்.
எனினும், சாம்பியன்ஸ் லீக்கில் சிட்டிக்கு ஏற்பட்ட அதே நிலைமையும் இப்போது நிகழ்ந்திருப்பதைத் தம்மால் ஏற்க முடியவில்லை என கார்டியோலா முணுமுணுத்தார்.
விஏஆர் தொழில்நுட்பம் குறித்து ஸ்பர்ஸ் நிர்வாகி மௌரிசியோ பொச்சிட்டினோவும் கருத்துரைத்தார்.
“விஏஆர் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் சில நேரங்களில் அதன் முடிவு நமக்கு சாதகமாக இருக்கலாம். சில வேளைகளில், அதன் முடிவு நமக்கு விரக்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தலாம்,” என்றார் அவர்.