புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தீவிரவாத மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் உயிருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மின்னஞ்சலுக்கு மொட்டை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வந்த அம்மின்னஞ்சலை ஐசிசி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் பகிர்ந்து கொண்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சு மூலம் வெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய தூதரையும் ஆண்டிகுவா அரசையும் இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பு கொண்டது.
இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியத் தலைமை நிர்வாகி அதிகாரி ராகுல் ஜோஹ்ரி தெரிவித்தாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
இதுபற்றி ஐசிசி எனப்படும் அனைத்துலக கிரிக்கெட் மன்றம் எதுவும் கூறவில்லை.
மேலும் எந்தத் தீவிரவாத அமைப்பு இந்த மின்னஞ்சலை அனுப்பியது என்று தெரியாத நிலையில், அது போலியானது என்றும் கூறப்படுகிறது.
இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அணிக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுவதாகத் தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர், மூன்று போட்டிகள் ஒருநாள் தொடர்களைக் கைப்பற்றிய இந்திய அணி, நாளை மறுநாள் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட
உள்ளது.